Wednesday, December 3, 2025 3:46 pm
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மாசடைந்துள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மன்னார் மாவட்டத்திற்கு விநியோகிக்கப்படும் குடிநீரானது பாதுகாப்பான குழாய்க் கிணறுகளில் இருந்தே பெறப்படுகிறது. வழங்கப்படும் நீர் மூலங்கள் மேற்பரப்பு வெள்ளத்தால் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை எனவும் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
தமது ஆய்வுகூடப் பிரிவானது தொடர்ச்சியாக நீரின் தரத்தைப் பரிசோதித்து வருவதாகவும் மன்னார் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானதுடன், பருக உகந்தது எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இது குறித்து அச்சமடைய தேவையில்லை எனவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளதுடன், இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்புகள் அனைத்தும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

