Sunday, August 23, 2026 3:31 pm
ஈரான் கொடியுடன் கூடிய 16 – மிகப் பெரிய கச்சா எண்ணெய் கப்பல்கள் (VLCC) வாரக்கணக்கில், சில ஒரு மாதத்திற்கும் மேலாக காலிக் கடலில் நிற்கின்றன.
அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட அத்தகைய கப்பல்களின் கோரிக்கைகளைக் கையாள்வது தொடர்பாக, இலங்கைத் துறைமுகங்களை மையமாகக் கொண்ட தனியார் கடல்சார் ஆதரவு சேவைகளுக்கு எவ்வாறு அறிவுறுத்துவது என்பது குறித்த கொள்கை அறிக்கை மற்றும் வழிகாட்டுதல்களை வெளிநாட்டு விவகார அமைச்சகத்திடம் கோரியிருந்தபோதிலும், தெளிவான அறிவுறுத்தல்கள் இன்னும் பெறப்படவில்லை என்று இலங்கை துறைமுக அதிகாரசபையுடன் (SLPA) இணைக்கப்பட்டுள்ள ஒரு மூத்த அதிகாரி கொழும்புப் பத்திரிகையிடம் பத்திரிகையிடம் தெரிவித்தார்.
ஒரு மாதத்திற்கும் மேலாக, பத்துக்கும் மேற்பட்ட பெரிய கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் இலங்கையின் தென்மேற்குக் கடற்கரைக்கு வந்துகொண்டிருக்கின்றன. அவை, காலித் துறைமுகத்திற்கு அருகிலுள்ள இலங்கை நீர்ப்பரப்பின் 12 கடல் மைல் (nmi) எல்லைக்குச் சற்று வெளியே வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.
வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் நிலவரப்படி, ‘தி சண்டே மார்னிங்’ பத்திரிக்கை, திறந்த மூல கப்பல் கண்காணிப்புத் தளங்களைப் பயன்படுத்தி, காலித் துறைமுகத்திற்கு வெளியே ஈரான் கொடி ஏற்றப்பட்ட 16 எண்ணெய்க் கப்பல்கள் ஒரு கண்காணிப்புக் கோடு அமைப்பில் நிலைகொண்டிருப்பதை கண்காணித்தது. இத்தகைய கப்பல்கள், அமெரிக்கத் தடைகளை மீறி உலகெங்கிலும் உள்ள வாங்குபவர்களுக்கு ஈரானிய எண்ணெயைக் கொண்டு செல்வதாக சந்தேகிக்கப்படுகின்றன, அதே சமயம் சில கப்பல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் (UN) தடைகளையும் மீறுகின்றன.
333 மீற்றர் நீளமுள்ள இந்த பிரம்மாண்டமான கப்பல்கள் ஈரானின் ‘இருண்ட கடற்படை’யின் ஒரு பகுதியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதோடு, அமெரிக்க கருவூலத் துறையின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் (OFAC) தடைகளுக்கும் உள்ளாகியுள்ளன. அமெரிக்காவின் OFAC அமைப்பிடம், தடைசெய்யப்பட்ட கப்பல்கள், விமானங்கள், நிறுவனங்கள், நபர்கள் மற்றும் சொத்துக்களின் பட்டியல் உள்ளது.

