Thursday, August 20, 2026 7:42 pm
மேற்கு மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், நிலச்சரிவு காரணமாகச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகளும் நிவாரணப் பணியாளர்களும் புதன்கிழமை தெரிவித்தனர்.
பாபோவா நகரத்திலிருந்து சுமார் 50 கி.மீ (31 மைல்கள்) தொலைவிலும், கமரூன் எல்லைக்கு அருகிலும் அமைந்துள்ள ஜாம்போயே கிராமத்தில், செவ்வாய்க்கிழமை மதியம் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது . சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில், சுரங்கத் தொழிலாளர்களாக இருக்கலாம் எனக் கருதப்படும் ஒரு கூட்டத்தின் மீது மணல் பனிச்சரிவு ஒன்று இறங்கி அவர்களை மூடுவது போல் தோன்றியது.
அதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள செஞ்சிலுவைச் சங்கத் தன்னார்வலரான ஜெர்வைஸ் கனகோரோ, புதன்கிழமை அன்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம், இடிபாடுகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தார். உள்ளூர் சுரங்க சங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தினார்.

