Wednesday, June 17, 2026 6:27 am
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) இரு தரப்பினரும் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, இறுதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் வெள்ளிக்கிழமை தொடங்கும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார் என அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் ஈரான் , அமெரிக்கா ஆகியவற்றுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை இறுதி செய்யப்பட்ட அமைதிப் புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து விளக்கியபோது, ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் வெளிநாட்டுத் தூதர்களுடனான சந்திப்பில் அராக்சி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
“இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகள், தீர்மானிக்கப்படும் இடத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் கூறினார். மேலும், ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய “குற்றவியல் ஆக்கிரமிப்புகளால்” ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஒரு உடன்பாட்டை எட்டுவதில் ஏற்பட்ட சிரமங்கள் காரணமாக, “நாங்கள் இறுதியாகப் பேச்சுவார்த்தைகளை இரண்டு கட்டங்களாகப் பிரிக்க முடிவு செய்தோம்” என்றும் அவர் விளக்கினார்.
முதல் கட்டத்தில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவிப்பதே மிக முக்கியமான விஷயமாக இருக்கும் என்று குறிப்பிட்ட அரக்சி, “நாங்கள் எடுத்த முடிவின் அடிப்படையில், ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட திங்கட்கிழமை காலையில் போர் முடிவுக்கு வந்ததாகவும் அறிவிக்கப்பட்டது, ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அதிகாரப்பூர்வ தொடக்கம் வெள்ளிக்கிழமை அன்றுதான் இருக்கும்” என்றார்.
லெபனானில் போர் முடிவுக்கு வருவதை ஈரான்-அமெரிக்க ஒப்பந்தத்தின் “பிரிக்க முடியாத” ஒரு பகுதியாக அரக்சி விவரித்தார். சமாதானப் புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து வலியுறுத்திய அராக்சி, “போரின் முடிவில் (இஸ்ரேலின்) ஆக்கிரமிப்பு முடிவுக்கு வருவதும் அடங்கும். இந்தப் போரில் இஸ்ரேலியப் படைகள் தாங்கள் ஆக்கிரமித்த (லெபனான்) பிரதேசங்களிலிருந்து வெளியேறாமல் போரின் முடிவு முழுமையடையாது” என்றார்.
இனிமேல், லெபனானுக்கு எதிரான இஸ்ரேலின் எந்தவொரு இராணுவத் தாக்குதலையும், லெபனான் பிரதேசங்களின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பையும் சமாதானப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மீறலாக ஈரான் கருதும் என்று அராக்சி வலியுறுத்தினார்.
பல வாரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக அமெரிக்கா, பாகிஸ்தான் , ஈரான் ஆகிய நாடுகள் திங்கள்கிழமை அதிகாலையில் அறிவித்தன. மேலும், இந்த ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்படும் என்றும் தெரிவித்தன.

