Monday, June 15, 2026 2:09 pm
வாழ்விடங்களை இழந்து கடந்த 36 வருடங்களாக இன்னல்பட்டு வருகின்ற மக்களின் துயர் களைய ஈ.பி.டி.பி , துணையாக நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இன்று நடைபெற்ற மயிலிட்டி காணிகளை விடுவிப்பதற்கான போட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து , குறித்த போராட்டத்தில் ஈ.பி.டி.பி கலந்து கொண்டிருந்த நிலையில் கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் ,
மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கின்றது. அந்த வகையில் கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்து , 18500 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை விடுவித்திருந்தோம். எஞ்சிய காணிகளையும் விடுவிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
உயர் பாதுகாப்பு வலயக் காணிகள் மாத்திரமன்றி , வனவள திணைக்களம் , வனஜுவராசிகள் திணைக்களம் , தொல்லியல் திணைக்களம் போன்றவற்றினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளையும் மீட்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. துரதிஷ்டவசமாக ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக அவற்றை பூரணப்படுத்த முடியவில்லை.
எனினும் , எமது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் , எமது மக்களின் எதிர்பார்ப்புக்கள் தென்னிலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றோம். எனவே மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு எமது ஆதரவு தொடரும் என்று தெரிவித்தார்.

