Sunday, August 16, 2026 6:31 am
கிழக்கு இந்தோனேசியாவின் புளோரஸ் தீவின் கடற்கரைக்கு அப்பால் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் பலத்த பின் அதிர்வுகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் தணிப்பு முகமை (BNPB) சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
தனது சமீபத்திய அறிவிப்பில், குறைந்தது 346 வீடுகள் சேதமடைந்துள்ளதாக BNPB தெரிவித்துள்ளது. இதில் 157 வீடுகள் கடுமையாகவும், 41 வீடுகள் மிதமாகவும், 148 வீடுகள் லேசாகவும் சேதமடைந்துள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் 87 கல்வி நிறுவனங்கள், 18 சுகாதார மையங்கள், ஐந்து வழிபாட்டுத் தலங்கள் , ஆறு அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது வசதிகளும் சேதமடைந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கிழக்கு நுசா தெங்காரா மாகாண ஆளுநர் மெல்கி லாகா லேனா, சனிக்கிழமை குபாங்கில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், நிலச்சரிவுகளால் சில சாலைகள் துண்டிக்கப்பட்டதாகவும் அல்லது தடுக்கப்பட்டதாகவும் கூறினார்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.

