Monday, May 11, 2026 10:13 am
யாழ் மாவட்ட கல்வியை சிதைப்பது மட்டுமல்லாது வட மாகாண கல்வியை முழுமையாக சிதைக்கும் நிகழ்ச்சி நிரலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதற்கு வடமாகாண ஆளுநர் உடந்தையாக இருக்கிறார் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபசெயலாளர் தீபன் திலீசன் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் வடக்கு ஆசிரியர் இடமாற்றத்தில் பல முறைகேடுகள் இடம் பெற்ற நிலையில் அது தொடர்பில் நீதிமன்றங்களிலும் மனித உரிமை ஆணைக்குழுவிலும் விசாரணைகள் இடம் பெற்று வருகிறது.
அண்மையில் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட சேவையின் தேவை கருதிய இடமாற்றம் முறைகேடாக மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டி இடைக்கால தடையையும் விதித்தது.
அதன் பின்னர் இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்களின் மேன்முறையீடுகளை பரிசீலிப்பதாக ஆணைகுழுக்கு வழங்கிய உறுதிப்பாட்டினை அடுத்து இடைக்கால தடை நீக்கப்பட்டு தொடர்ந்தும் விசாரணைகள் இடம் பெற்று வருகிறது.
அவ்வாறான நிலையில் தற்போது மேன்முறையீட்டை பரிசீலிக்கிறோம் என்ற போர்வையில் முறையற்ற இடமாற்றங்களை ஆசிரியர்களுக்கு வழங்குவது ஏற்க முடியாது.
யாழ் மாவட்டத்தில் ஆங்கில மொழி மூலம் இரசாயனவியல் பாடத்தை 30 பாட வேளை கற்பிக்கின்ற ஆசிரியர் தனது இட மாற்றத்தில் வெளி மாவட்டத்தை இரண்டு வருடங்கள் ஒத்திவைக்குமாறு கோரிக்கை முன்வைத்தார்.
அவரை தற்போது தென்மராட்சி நிலையத்தில் ஆங்கில மொழி மூலம் இரசாயனவியல் பாடமே இல்லாத வலையத்துக்கு இடமாற்றம் வழங்கியுள்ளார்கள்.
அண்மையில் இடம்பெற்ற உயர்தர பரிட்சையில் உயிரியல் விஞ்ஞானத்தில் யாழ் மாவட்டம் முதல் இடத்தை பிடித்த நிலையில் இதனை விரும்பாத தரப்பு யாழ் மாவட்ட கல்வியை அழிப்பதற்கான முயற்சியில் தொடங்கியுள்ளது.
யாழ் வலையத்தில் ஆங்கில மொழி மூலமாக இரசாயனவியல் பாடத்தை கற்பித்துக் கொண்டிருந்த ஆசிரியரை என்ன தேவைக்காக பாடமே இல்லாத வலயத்துக்கு இடமாற்றம் வழங்குகிறார்கள்.
ஆசிரியரிடம் மாற்றத்தை மேற்கொள்வதில் நாங்கள் எந்த இடையூறும் மேற்கொள்ளப் போவதில்லை ஆனால் சேவையின் தேவை கருதி முறையற்ற இடமாற்றத்தை மேற்கொள்வதை எம்மால் வேடிக்கை பார்க்க முடியாது.
அதேவேளை வெளி மாவட்ட மாணவர்கள் பாவம் ஆசிரியர் இடமாற்றங்களை செய்வதில் எமது சங்கம் இடையூறு விளைவிப்பதாக சிலர் காட்ட முயல்கின்றனர்.
ஆசிரியர் இடமாற்றம் என்பது முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களில் மேற்கொள்ளும் எந்த ஒரு இட மாற்றத்தையும் நாம் தட்டிக் கேட்க தயங்க போவதில்லை.
யாழ் மாவட்டத்தின் கல்வியை அழிப்பதற்கு திரை மறைவில் பாரிய சாதியொன்று இடம்பெற்று வருகிறது அதனை எல்லோரும் அறிந்து கொள்வதோடு விழிப்பாகவும் இருக்க வேண்டும்.
எமது தமிழ் சமூகத்தின் கல்வி வளர்ச்சியை விரும்பாத தரப்பினர்கள் ஆசிரியர் இட மாற்றங்களை முறையாற்று வழங்கி மாணவர்களை கல்வியில் பின்னோக்கி நகர்த்துவதே திட்டம்.
உயர் பதவிகளை வகிக்க வேண்டும் என்பதற்காக சில அதிகாரிகள் துணை போவதும், ஆளுநரும் ஒத்தாசை வழங்குவது எமது இனத்திற்கு கிடைத்த சாபமாக பார்க்கிறோம்.
மக்கள் தெளிவாக ஒன்றை விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது யாழ்ப்பாணத்தின் கல்வியையும் வடக்கு மாகாணத்தினுடைய கல்வியையும் சிதைப்பதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொள்ளுகின்ற முயற்சிக்கு ஆளுநர் உடந்தையாக இருப்பது கவலை தருகிறது.
ஆகவே இதற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்து தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை விரைவில் மேற்கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

