Friday, June 26, 2026 10:24 am
தமக்கான வேலை வாய்ப்பில் அநீதி இழைக்கப்படுவதைக் கண்டித்து உடனடியாக வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகள் யாழில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்படடிருந்தது.
போராட்டம் செய்ய போவதாக பட்டதாரிகள் முன்னரே அறிவித்திருந்த நிலையில் மாவட்டச் செயலகத்தை சுற்றி பெருமளவிலான பொலிஸார் , புலனாய்வாளர்கள் என கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது பட்டதாரிகள் சங்க செயலாளர் ‘கபில்டன் போல்’ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ,
வடக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள், தமக்கான வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென தொடர்ந்தும் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். ஆனால் அரசின் ஒரு சில வேலை வாய்ப்பு நியமனங்களில் கூட அநீதி இழைக்கப்பட்டு வருவதுடன் வேலை வாய்ப்பை வழங்குவதாக தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர்.
இவ்வாறான நிலைமையிலே நாங்கள் இப்போது போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம். எமக்கான வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை தொடர்ந்து நாங்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.
இனிவரும் காலங்களில் நாம் முன்னெடுக்கும் இவ்வாறான போராட்டங்களில் வேலை வாய்ப்பை எதிர்பார்க்கும் அனைத்து பட்டாதாரிகளும் இதில் கலந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

