Sunday, March 29, 2026 11:52 am
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆக்கிரமிப்பு நாடுகடத்தல் முயற்சிகள், ஈரான் மீதான போர் பிற கொள்கைகளைக் கண்டித்து, “நோ கிங்ஸ்” பேரணிகளின் மூன்றாவது கட்டமாக, சனிக்கிழமையன்று அமெரிக்கா முழுவதும் உள்ள நகர வீதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இறங்கினர்.
முந்தைய இரண்டு நாடு தழுவிய நிகழ்வுகள் மில்லியன் கணக்கான பங்கேற்பாளர்களை ஈர்த்ததைத் தொடர்ந்து, அனைத்து 50 மாநிலங்களிலும் 3,200-க்கும் மேற்பட்ட போராட்டங்கள் திட்டமிடப்பட்டிருந்தன.
நியூயோர்க், டல்லாஸ், பிலடெல்பியா , வாஷிங்டன் ஆகிய நகரங்களில் பெரிய பேரணிகள் நடைபெற்றன, இது, கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இயக்கத்தின் முதல் அணிதிரட்டலுடன் ஒப்பிடும்போது, சிறிய சமூகங்களில் கிட்டத்தட்ட 40% அதிகரிப்பு என்று அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான ட்ரம்பின் ஒடுக்குமுறையின் ஒரு முக்கியப் பகுதியாக விளங்கும் மினசோட்டாவில், செயின்ட் பாலில் உள்ள மாநில சட்டமன்றத்திற்கு வெளியே ஒரு மாபெரும் பேரணி நடைபெற்றது. இந்த ஆண்டு மினியாபோலிஸில் கூட்டாட்சி குடியேற்ற அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட அமெரிக்கக் குடிமக்களான ரெனி குட் மற்றும் அலெக்ஸ் பிரெட்டி ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகளைப் பலர் உயர்த்திப் பிடித்திருந்தனர்.

