Monday, March 23, 2026 2:31 pm
இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பை, இலங்கைக்கான ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதுவர் கலாநிதி அலிரெசா டெல்கோஷ், மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் உள்ள ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதரகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் கருத்தினை வெளியிட்ட அவர், இலங்கையை ஒரு நட்பு நாடு என்று விவரித்ததோடு ஈரான் தனது பங்காளிகளுடன் திறந்த மற்றும் ஆதரவான நிலைப்பாட்டைப் பேணி வருகிறது என்றும் தெரிவித்தார்.
இலங்கை உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்தும் அணுகக்கூடியதாக உள்ளது. அத்தகைய நாடுகளின் தேவைகளை எளிதாக்க ஈரான் தயாராக உள்ளது என்றும் உறுதிப்படுத்தினார்.
மேலும், இலங்கைக்குத் தேவைப்பட்டால் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க ஈரான் தயாராக உள்ளது, இரு நாடுகளுக்கும் இடையே வலுவான மற்றும் ஒத்துழைப்புடன் கூடிய உறவுகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
இலங்கை இக்கட்டான நிலைக்கு உள்ளாவதை ஈரான் ஒருபோதும் விரும்பாது என்றும், ஈரான் தேசத்திற்கு இலங்கை மிகவும் மரியாதைக்குரிய நாடு என்றும் அவர் தெரிவித்தார். ஈரானில் உள்ள இலங்கையர்கள் மீண்டும் தாயகம் திரும்ப விரும்பினால், அதற்கான வசதிகளைச் செய்து கொடுக்க ஈரான் அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தூதுவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, அண்மையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டொர்பிடோ தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட ஈரானின் ‘IRIS Dena’ போர்க்கப்பலில் இருந்தவர்களை மீட்பதற்கு, ஈரான் கோரிக்கை விடுப்பதற்கு முன்னரே இலங்கை நடவடிக்கை எடுத்திருந்தது. இலங்கையின் அந்த உதவியை இச்சந்தர்ப்பத்தில் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

