Monday, December 29, 2025 1:45 pm
இலங்கைக்கு ஒரு ஆண்டில் வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை இன்று திங்கட்கிழமை முறியடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு 2,333,796 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். இதுவே அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த ஆண்டாக பதிவாகியிருந்தது. இந்நிலையில் இன்று இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் 2,333,797 ஆவது சுற்றுலாப் பயணி இன்று காலை வரவேற்கப்பட்டதாக இலங்கை சுற்றுலாச் சபை தெரிவித்துள்ளது.
“டித்வா” புயல் அனர்த்தம் போன்ற சவால்களுக்கு மத்தியிலும் இந்த இலக்கை எட்டியமையானது இத்துறை மற்றும் அதன் பங்குதாரர்களின் பலத்தையும், ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது என இலங்கை சுற்றுலாச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2026 ஆம் ஆண்டிற்கான “ஆசியாவில் பார்வையிட சிறந்த ஐந்து இடங்களில்” ஒன்றாக இலங்கையை யுஎஸ் நியூஸ் அன்ட் வேர்ல்ட் ரிப்போட் பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

