Monday, December 22, 2025 12:19 pm
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இலங்கையிலிருந்து வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக இளைஞர்கள், தாய்மார் உள்ளிட்ட பலர் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர். இவ்வாறாக வேலைவாய்ப்புக்காக செல்லும் பலர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதன்படி , கடந்த 10 ஆண்டுகளில் வேலைக்காக வெளிநாடு சென்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை 300,000 ஐத் தாண்டியது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னர் , 2024 ஆம் ஆண்டில் 314,673 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
வேலைக்காக வெளிநாடு சென்றவர்களில் 184 ,085 பேர் ஆண் தொழிலாளர்களாகவும் , 116,106 பேர் பெண் தொழிலாளர்களாகவும் உள்ளனர்.
அத்துடன் 194,982 பேர் தங்களது முயற்சியினால் நேரடியாக வெளிநாடு சென்றுள்ளதுடன் , 105,209 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊடாக வெளிநாடு சென்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் குவைத்துக்குச் சென்றுள்ளனர். குவைத்துக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 75,200 ஆக பதிவாகியுள்ளது. இதேவேளை , இரண்டாவது இடத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (துபாய்) காணப்படுவதுடன் ,அங்கு 57 ,037 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர்.
அதன்படி , 2025 ஆம் ஆண்டில் தென் கொரியாவிற்கு 6,272 இலங்கையர்களும் , இஸ்ரேலுக்கு 12,728 பேரும் , ருமேனியாவிற்கு 12,180 பேரும், ஜப்பானிற்கு 10,717 இலங்கையர்களும் வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர்.
இதனிடையே , 2025 ஆம் ஆண்டின் கடந்த 11 மாதங்களில் வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து இலங்கைக்கு 7.19 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளதாகவும் , 2025 நவம்பர் மாதத்தில் மட்டும் 673.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு கிடைத்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

