Monday, November 17, 2025 3:03 pm
சட்டவிரோதமான முறையில் திருகோணமலை கடற்கரை பகுதியில், புத்தர் சிலை ஒன்றை நிறுவ முற்பட்ட போது, மக்களின் பாரிய போராட்டத்தின் பின்னர் குறித்த சிலை நேற்று இரவு அகற்றப்பட்டுள்ளது.
திருகோணமலை மாநகர சபைக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் ஏற்கனவே அரசமரத்துடன் இணைந்த புத்தர் சிலை ஒன்று காணப்பட்டது. குறித்த சிலைக்கு அருகே புதிய வணக்கஸ்தல கட்டுமான பணிகள் நேற்று முன்தினம் இரவோடு இரவாக திடீரென ஆரம்பிக்கப்பட்டன.
இந்த விடயம் தொடர்பாக திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளால் முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில், கட்டுமானப் பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பொலிசார் உத்தரவிட்டனர்.
வழங்கப்பட்ட உத்தரவையும் மீறி நேற்று இரவு புத்தர் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அவ்விடத்துக்கு வந்த பொலிசார் சிலை வைக்கும் செயற்பாட்டை தடுத்ததனால் பிக்குகளுக்கும் பொலிசாருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.

இந்த முரண்பாட்டின் போது பிக்கு ஒருவர் பொலிசாரின் கன்னத்தில் அறைந்ததை தொடர்ந்து, அங்கு பதட்ட நிலை ஏற்பட்டது. இதனைத் தொடந்து பொலிசார் புத்தர் சிலையை அகற்றியதுடன், பதட்ட நிலமையை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தனர்.

