Thursday, July 30, 2026 8:54 pm
உதைபந்தாட்டம்,கிறிக்கெற்,டென்னிஸ் ஆகிய போட்டிகளின் போது பார்வையாளர் அரங்கில் இருந்து பதாகைகள் காட்டப்படுவது வழமை. நடந்து முடிந்த உலகக்கிண்ணப் போட்டியில் ஆர்ஜென்ரீனா விளையாடிய போது, , பார்வையாளர் அரங்கில் அமர்ந்திருந்த நரைத்த முடியுடைய ஒரு ரசிகர், “நான்சகல உலகக் கிண்ணப் போட்டிகளையும் நேரில் கண்டிருக்கிறேன்” என்று கையால் எழுதப்பட்ட ஒரு பதாகையை ஏந்தி நின்றார். பெரிய எழுத்துக்களில் கிறுக்கப்பட்டிருந்த அந்தச் செய்தி மிகவும் எளிமையானதாக இருந்தாலும், தலைமுறை தலைமுறையாக உலகின் மிகப்பெரிய போட்டி நிகழ்வதைப் பல பத்தாண்டுகளாகப் பார்த்ததன் பாரத்தை அது சுமந்திருந்தது.
நீர் அருந்தும் இடைவேளையின்போது, மைதானத்தின் பிரம்மாண்டமான திரையில், அவர் அந்த ஜெர்சியையும் கையால் எழுதப்பட்ட பதாகையையும் கையில் பிடித்திருப்பது பெரிதாக்கிக் காட்டப்பட்டது. எதிரிகளையும், போட்டிகளையும், கால்பந்து சகாப்தங்களையும் கடந்து, இந்த விளையாட்டின் மாபெரும் நிகழ்வின் மற்றொரு அத்தியாயத்தைக் காண வந்திருந்த ஒரு ரசிகைக்காக, அவரைச் சுற்றியிருந்த கூட்டம் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தியது. அந்தக் காட்சியை மெஸ்ஸி வியப்புடன் பார்த்தார்.நிகழ்வைப் படம்பிடித்த காணொளியை ராஸ் ஸ்மித் பகிர்ந்தார். அது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.
பீபா, உலகக் கிண்ண அடையாள அட்டைகளை அணிந்திருந்த ஒரு ஊழியர், கூட்டத்தின் ஊடாக வந்து, கீழே ஆடுகளத்தில் கப்டன் லியோனல் மெஸ்ஸி அணிந்திருந்த அதே எண்ணான அர்ஜென்ரீனாவின் 10-ஆம் எண் சீருடையை அந்த வயதான ரசிகையிடம் வழங்கினார். ஆனந்தக் கண்ணீருடன் அந்த ரசிகை மெஸ்ஸியின் சீருடையை வாங்கினார்.

