Friday, April 17, 2026 8:55 pm
இஸ்ரேல்-லெபனான் போர்நிறுத்தக் காலம் முடியும் வரை, ஹோர்முஸ் ஜலசந்தி அனைத்து வர்த்தகக் கப்பல்களுக்கும் “முற்றிலும் திறந்திருக்கும்” என்று ஈரான் கூறியுள்ளது.
“லெபனானில் நிலவும் போர்நிறுத்தத்திற்கு இணங்க, போர்நிறுத்தம் நீடிக்கும் காலம் முழுவதும் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக அனைத்து வர்த்தகக் கப்பல்களும் செல்வதற்கு முற்றிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,” என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி வெள்ளிக்கிழமை X தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை பிற்பகுதியில் இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே 10 நாள் போர் நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்டது. இருப்பினும், ஈரான் மீதான போரின் போது இஸ்ரேலின் தெற்குப் படையெடுப்பை எதிர்த்துப் போராடி வரும் ஹிஸ்புல்லா ஆயுதக் குழு இதை அங்கீகரிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஈரானின் துறைமுகங்கள் ,கடல்சார் அமைப்பு ஏற்கனவே அறிவித்தபடி, கப்பல்கள் நீர்வழிப்பாதை வழியாக ஒருங்கிணைக்கப்பட்ட பாதையில் செல்லும் என்று அராக்சி மேலும் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு சமூக ஊடகப் பதிவில், நீர்வழிப்பாதை “முற்றிலும் திறக்கப்பட்டு, வணிகத்திற்கும் முழுமையான போக்குவரத்திற்கும் தயாராக உள்ளது” என்று உறுதிப்படுத்தினார். இருப்பினும், போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவுடன் ஈரான் ஒரு ஒப்பந்தத்தை எட்டும் வரை, ஈரான் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை “முழு வீச்சில் தொடரும்” என்றும் அவர் மேலும் கூறினார்.
ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை கடற்படையின் அனுமதியுடன், இராணுவமல்லாத கப்பல்கள் மட்டுமே அந்த நீர்வழிப்பாதையைக் கடக்க அனுமதிக்கப்படும் என்று ஒரு மூத்த ஈரானிய இராணுவ அதிகாரி ஈரானிய அரசு ஊடகத்திடம் தெரிவித்தார்.

