Monday, August 31, 2026 1:09 pm
அமெரிக்காவால் கைதான வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் புகைப்படம் 8 மாதங்களுக்கு பின் வெளியிடப்பட்டது.
அமெரிக்க காவலில் உள்ள வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் புகைப்படங்கள் முதன்முறையாக சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட பின்னர், சுமார் எட்டு மாதங்களுக்கு பிறகு அவர் காவலில் இருக்கும் தோற்றத்தை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ஓகஸ்ட் 30ஆம் திகதி வெளியிடப்பட்ட அந்த இரண்டு புகைப்படங்களிலும் மதுரோ சாம்பல் நிற டிராக்சூட்,வெள்ளை நிற காலணிகள் அணிந்தபடி புன்னகையுடன் காணப்படுகிறார். இரு கைகளாலும் வெற்றி சின்னம் காட்டும் வகையிலும் அவர் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் மெட்ரோபாலிட்டன் தடுப்பு மையத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், அவை சமீபத்தில் எடுக்கப்பட்டவை அல்ல; ஜூன் 25, 2026 என்ற திகதி புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளது.
தனது பேரக்குழந்தைகள், குழந்தைகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு அன்பையும் நம்பிக்கையையும் தெரிவிக்கும் வகையில் மதுரோ இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தானும் தனது மனைவி சிலியா புளோரஸும் உறுதியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், தங்களது ஆதரவாளர்களின் பிரார்த்தனைகள் மற்றும் ஒற்றுமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மதுரோவும், அவரது மனைவியும் கடந்த ஜனவரியில் வெனிசுலாவில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதம் தொடர்பான குற்றச்சாட்டுகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர்; இந்த குற்றச்சாட்டுகளை மதுரோ மறுத்துள்ளார். அவரது வழக்கு 2027 ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் திகதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

