Thursday, September 17, 2026 11:10 pm
வடக்கு இலங்கையுடன் குடும்ப,கலாசாரத் தொடர்புகளைக் கொண்ட பிரிட்டிஷ் தமிழர்களின் பயண இணைப்புகளை மேம்படுத்துவதற்காக, இலண்டன் , யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு இடையே நேரடி விமான சேவைகளைக் கோரி பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் காரெத் தோமஸ் ஒரு மனுவைத் தொடங்கியுள்ளார்.
“யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமான சேவைகளைக் கொண்டு வாருங்கள்” என்ற தலைப்பிலான இந்த மனு, திருமணங்கள், இறுதிச் சடங்குகள், சமய விழாக்கள் , குடும்ப சந்திப்புகளுக்காக யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்யும் பிரிட்டிஷ் தமிழ் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை எடுத்துக்காட்டுகிறது.
ஹாரோ மேற்கு தொகுதியின் பிரதிநிதியான தோமஸ், தற்போது இலண்டனுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே நேரடி விமான சேவைகள் எதுவும் இல்லை என்றும், இதனால் பயணிகள் கொழும்பு வழியாகப் பயணித்து, கூடுதலாக சுமார் 400 கிலோமீற்றர் தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் கூறினார்.
மனுவின்படி, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் சாலை அல்லது இரயில் வழியாகச் செல்வதற்கு சுமார் ஆறு முதல் ஏழு மணி நேரம் ஆகிறது. இது வயதான பயணிகள், சிறு குழந்தைகளுடன் வரும் குடும்பங்கள் மற்றும் முக்கிய குடும்ப நிகழ்வுகளுக்காகப் பயணம் செய்பவர்களுக்குக் குறிப்பாகச் சிரமங்களை ஏற்படுத்துகிறது.
முன்மொழியப்பட்ட இந்த நேரடிச் சேவையானது, ஐக்கிய இராச்சியத்திற்கும் வட இலங்கைக்கும் இடையே பயண நேரங்களைக் குறைக்கவும், அணுகலை மேம்படுத்தவும், குடும்ப, கலாசார , சமூகத் தொடர்புகளை வலுப்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வட மாகாணத்தில் சுற்றுலா, முதலீடு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான சாத்தியமான நன்மைகளையும் இந்த மனு எடுத்துக்காட்டுகிறது.
இலண்டனுக்கும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையே வணிகரீதியாக சாத்தியமான ஒரு நேரடி விமானச் சேவையை ஆராய்ந்து ஆதரிப்பதற்காக, ஐக்கிய இராச்சிய அரசாங்கம், இலங்கை அதிகாரிகள், விமான நிறுவனங்கள் மற்றும் லண்டன் விமான நிலையங்கள் ஒன்றிணைந்து செயல்படுமாறு தோமஸ் அழைப்பு விடுக்கிறார்.
முன்மொழியப்பட்ட இந்த விமான இணைப்பை நிறுவுவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவாக மனுவில் கையொப்பமிடுமாறு இந்தப் பிரசாரம் பொதுமக்களை அழைக்கிறது.
இ

