Tuesday, May 12, 2026 11:04 am
இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கலாநிதி நய்யார் நசீர் (Maj. Gen (R) Dr. Nayyar Naseer) அவர்களுக்கும் , இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (11) அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹேன்னாயக்க உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால நட்புறவை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் , எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இளைஞர் பரிமாற்றத் திட்டங்கள் (Youth Exchange Programs) குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது . குறிப்பாக , இரு நாட்டு இளைஞர்களின் திறன்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கையெழுத்திடவும் இங்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
தவிர , விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன் , இரு நாடுகளுக்கும் இடையே கிரிக்கெட் போட்டிகளை ஏற்பாடு செய்தல் மற்றும் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தானின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தி , இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறையில் புதியதொரு பாய்ச்சலை ஏற்படுத்துவதே இப் பேச்சுவார்த்தையின் பிரதான நோக்கமாகும்.

