Tuesday, June 16, 2026 12:01 pm
இலங்கையின் தற்போதைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் சுமையை விட இரண்டு மடங்கு அதிகமான தேசிய சொத்துக்களை ஜே.வி.பி மற்றும் எல்.டி.டி.ஈ அமைப்புகள் கடந்த காலங்களில் அழித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (15) மாலை அம்பாறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் , கடந்த காலங்களில் நாட்டின் பொருளாதாரத்திற்கு அத்தனை அழிவுகளை ஏற்படுத்தியவர்களே இன்று எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகக் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஈஸ்டர் தாக்குதல் குறித்து முரண்பாடான கருத்துக்களைக் கூறி தங்களது இயலாமையை மறைக்க முயல்வதாகவும் , இத்தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு உதவிய சட்டத்தரணிகள் மற்றும் விசாரணைக் கோப்புகளை மூடிமறைத்தவர்களுக்கே இந்த அரசு இன்று உயர் பதவிகளை வழங்கியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அரசாங்கம் தனது பொய் வாக்குறுதிகள் அம்பலமாவதைத் தடுக்க , மக்களுக்கு எதிராக அடக்குமுறையைக் கையாளத் தயாராகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் விவசாய நிலைமை குறித்துப் பேசிய அவர் , பெரும்போகத்திற்கான உரத்தை வழங்க அரசாங்கத்திடம் முறையான திட்டம் இல்லை என்றும் , உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்குப் பதிலாக தங்களுக்கு நெருக்கமான வர்த்தகர்களுக்காக வெளிநாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்து அரசு மடிவளர்ப்பதாகவும் தெரிவித்தார்.
இதனால் நெல், காய்கறி, பழங்கள் மற்றும் கரும்பு விவசாயிகளும், சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களும் கடுமையான கடன் சுமையில் சிக்கி, தங்களது வியாபாரங்களை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல், நாட்டை கட்டியெழுப்ப நிதி உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும் , நாடாளுமன்றக் குழுக்களில் அவ்வாறான நிதி எதுவும் இல்லை என்பதே அம்பலமாகியுள்ளதாகத் தெரிவித்த அவர், அரசாங்கக் கணக்குகளில் உள்ள பணம் தவறான கணக்குகளுக்குச் செல்வதாகவும் சாடினார்.
சாதாரண மக்களின் வங்கி வைப்புக்கள் மற்றும் வரிகள் குறித்து கேள்வி எழுப்பும் அதிகாரிகள், அரசாங்கத்துடன் தொடர்புடைய பெரும் வர்த்தகர்களின் கணக்குகளுக்குக் கோடிக்கணக்கான பணம் முறைகேடாகச் செல்லும்போது மௌனம் காப்பதாகவும், அதிகப்படியான வரிச்சுமையால் கிராமப்புறக் கடைகள் மூடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தால் தனியார் துறையில்கூட வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை என்றும், கிராம மட்டத்திலிருந்த மத வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாத்த சிவில் பாதுகாப்புப் படை இளைஞர்கள் அரசியல் தேவைகளுக்காக கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
அவர்களுக்குக் கிடைக்கும் குறைந்த ஊதியத்தைக் கொண்டு கொழும்பில் வாழவும் முடியாமல், கிராமத்திலுள்ள குடும்பங்களுக்குப் பணம் அனுப்பவும் முடியாமல் அவர்கள் தவிப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பேசுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், இன்று சாதாரண மக்களின் துயரங்களை அறியாது, பெரு வர்த்தகர்களின் முதலாளித்துவ வர்க்கத்தைப் பாதுகாக்கும் ஒரு ஆட்சியாக மாறியுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

