Wednesday, May 13, 2026 3:16 pm
விளையாட்டு துப்பாக்கியைக் காட்டி மிரட்டி இளம்பெண் ஒருவரைக் கடத்த முயன்ற உறவின சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் இதற்காகப் பயன்படுத்திய விளையாட்டுத் துப்பாக்கி மற்றும் கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த (07) ஆம் திகதி மத்தேகொட , கிரிகம் பமுனுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் விளையாட்டுத் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த சந்தேக நபர்கள் இருவரும் , அங்கிருந்த இளம் பெண்ணைக் கடத்த முயன்றுள்ளனர்.
இதன்போது வீட்டில் இருந்த மற்றொருவர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து , அவர்கள் காரில் தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக மத்தேகொட பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்த நிலையில் , கல்கிசை குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் , கல்கிசை பகுதியில் வைத்து விளையாட்டுத் துப்பாக்கி மற்றும் காருடன் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரு தரப்பினருக்கும் இடையே நிலவும் தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்தச் செயல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் , கல்கிசை குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

