Wednesday, May 13, 2026 1:04 pm
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தில் அரசியல் பலம் கொண்டவர்கள் அனைவரும் சட்டத்திற்கு மேலேயே இருப்பதாகவும் , சட்டத்தின் ஆட்சி என்பது வெறும் மேடைப் பேச்சாக மட்டுமே சுருங்கிவிட்டது என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (13) பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
நேற்று மாத்தளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ‘சட்டத்திற்கு மேல் எவரும் இருக்க முடியாது’ என ஜனாதிபதி குறிப்பிட்ட கருத்தை கடுமையாக விமர்சித்த சஞ்சீவ எதிரிமான்ன, தற்போதைய அரசாங்கத்தில் பாரிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் எவ்வித விசாரணைகளும் இன்றி சுதந்திரமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, அரசாங்கத்தின் அரசியல் பலம் கொண்டவர்கள் தொடர்புபட்டதாகக் கூறப்படும் கொள்கலன் மோசடி , வெலிகம பிரதேச சபை உறுப்பினர்கள் மாயமான விவகாரம் மற்றும் ஒரு லட்சம் பேரைக் கொன்றாவது அதிகாரத்தைத் தக்கவைப்பேன் எனத் தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் கடுவெல மேயர் ரஞ்சன் ஜயலால் போன்றோர் மீது இதுவரை எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோல் , யக்கலவில் உள்ள முன்னிலை சோசலிசக் கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க , உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரும் இன்று சட்டத்திற்கு அப்பால் பாதுகாக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தினார்.
இரட்டைக் குடியுரிமையுடன் நாடாளுமன்றம் வந்ததாகக் கூறப்படும் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும மீதான விசாரணைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், நிலக்கரி மோசடி மற்றும் டொலர்கள் மாயமானமை போன்ற பாரிய ஊழல்கள் தொடர்பில் அடிப்படை வாக்குமூலங்கள் கூடப் பெறப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை என்பது உலகம் தோன்றிய காலத்திலிருந்தே இருக்கும் ஒரு தத்துவமாகும் என்றும் , அதனை ஜனாதிபதி புதிதாகக் கண்டுபிடித்தது போலப் பேசுவதில் பயனில்லை என்றும் சஞ்சீவ எதிரிமான்ன இதன்போது குறிப்பிட்டார். அழகான பேச்சுகளை நிகழ்த்துவதால் ஒரு தலைவரின் அரசியல் பெறுமதி கூடிவிடாது எனவும் , தனது பேச்சை ஜனாதிபதி நடைமுறையில் உறுதிப்படுத்துகிறாரா என்பதிலேயே அவரது அரசியல் எதிர்காலம் தங்கியுள்ளது என்றும் தெரிவித்த அவர் , தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளில் சட்டத்தை நிலைநாட்டும் எவ்வித ஆர்வமும் தென்படவில்லை என மேலும் தெரிவித்தார்.

