Tuesday, April 28, 2026 2:40 pm
கொக்கைன் கடத்தும் கிளர்ச்சியாளர்கள் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொலம்பிய நெடுஞ்சாலையில் நடத்திய குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்கம் திங்களன்று தெரிவித்தது. இது, பல தசாப்தங்களில் நாட்டில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலாகும், மேலும் தேர்தலுக்கு சற்று முன்னதாக இது நிகழ்ந்துள்ளது.
அமைதியற்ற தென்மேற்கு கௌகா மாகாணத்தில் உள்ள பான்-அமெரிக்கன் நெடுஞ்சாலையில் சனிக்கிழமை நடந்த தாக்குதலில் 56 பேர் காயமடைந்ததோடு, பஸ்களும் வான்களும் கடுமையாகச் சேதமடைந்தன.
ஆளுநர் ஒக்டாவியோ குஸ்மான், இந்த குண்டுவெடிப்பை “பல பத்தாண்டுகளில் அப்பகுதியில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகவும் கொடூரமான மற்றும் ஈவிரக்கமற்ற தாக்குதல்” என்று விவரித்தார். மேலும், இது 200 கன மீற்றர் அளவுள்ள ஒரு பள்ளத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார். வெடிப்பின் தாக்கத்தால் பல கார்கள் கவிழ்ந்தன. காயமடைந்தவர்களில், மூன்று பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். ஐந்து குழந்தைகளும் காயமடைந்தனர், ஆனால் அவர்கள் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டனர்.
சனிக்கிழமையன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய இராணுவத் தளபதி ஹியூகோ லோபஸ், தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு பேருந்தையும் மற்றொரு வாகனத்தையும் கொண்டு சாலையை மறித்து போக்குவரத்தைத் தடுத்த பின்னரே குண்டு வெடித்ததாகத் தெரிவித்தார். “இது பொதுமக்களுக்கு எதிரான ஒரு பயங்கரவாதத் தாக்குதல்,” என்று லோபஸ் கூறினார்.

