Friday, March 27, 2026 4:37 pm
யாழ்ப்பாண மாவட்டத்தின் இந்த ஆண்டுக்குரிய முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைவராகவும், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் இணைத்தலைவராகவும் தலைமை தாங்கினர்.
யாழ்ப்பாண மாவட்ட செயலாளரும் ஒருங்கிணைப்புக்குழுவின் செயலாளருமான ம.பிரதீபனின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இக்கூட்டத்தில், மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் சமகால சவால்கள் தொடர்பில் பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டன.

மத்திய கிழக்கு பிராந்திய மோதல்களால் ஏற்பட்டுள்ள தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, எரிபொருள் விநியோகத்தை சீரமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது. குறிப்பாக, யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே பொருட்கள் போக்குவரத்தில் ஈடுபடும் பாரவூர்திகளுக்கான மேலதிக எரிபொருள் கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.
கடற்றொழில் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் அந்தந்த அமைப்புக்களின் விண்ணப்பங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாகவும், ஏனைய தொழிற்துறையினர் பிரதேச செயலகங்கள் ஊடாக தமது கோரிக்கைகளை முன்வைத்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
புதிதாக சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களுக்கு உரிய அனுமதிகள் இதன் பின்னர் வழங்கப்பட்டன. மேலும், யாழ். மாவட்ட செயலகம், வடக்கு மாகாண சபை மற்றும் மத்திய அரசின் திணைக்களங்களால் இவ்வாண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. அத்துடன், ‘பிரஜாசக்தி’ தேசிய நிகழ்ச்சித் திட்டம் மற்றும் ‘தூய்மையான இலங்கை’ வேலைத்திட்டங்களின் நடைமுறை நிலைப்பாடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழான வீதிகளின் திருத்தப் பணிகள், படகுச் சேவைகள் மற்றும் தீவகப் பிரதேசங்களுக்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. போக்குவரத்துச் சேவைகளான பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை (சிசுசரிய), இரவு நேர சேவை (நிசுசரிய) மற்றும் தொழில்துறை சார்ந்த இடங்களுக்கான போக்குவரத்து சேவை (ஹமிசரிய) ஆகியவற்றின் நிலை குறித்தும் ஆராயப்பட்டது.
கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு மாகாண அவைத்தலைவர் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பில் ஆராயப்பட்டது. அத்துடன், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தீர்வு காணப்படாது மாவட்டக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் எட்டப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெ.றஜீவன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, சி.சிறீதரன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், முப்படையினர், உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தவிசாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்றனர்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது மாவட்ட செயலக சூழலில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு , பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பில் ஆசிரியர்களால் மாவட்ட செயலகம் முன் போராட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் , காணி விடுவிப்பு கோரி காணி உரிமையாளர்களும் மாவட்ட செயலகம் முன் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட செயலக சுற்று வட்ட பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.


