Wednesday, February 11, 2026 10:49 am
யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தையில் துப்பாக்கியுடன் வந்தவர் கொண்டு வந்த துப்பாக்கி, போலி துப்பாக்கி எனவும் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள மருதனார்மடம் சந்தைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்க வந்தவரால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டது
குறித்த நபர் தலைக்கவசம் அணிந்து, கைகளுக்கு கையுறை அணிந்தவாறு, பை ஒன்றுடன் வந்து அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் பச்சை மிளகாயை கொள்வனவு செய்து கொண்டு “சந்தைக்குள் வட்டிக்கு பணம் வழங்குபவர்கள் யார் ? ” என வினாவியுள்ளார்.
குறித்த நபர் கொண்டுவந்த பையினுள் ரி56 ரக துப்பாக்கி காணப்பட்டதாகவும், அவரது இடுப்பு பகுதியில் கைத்துப்பாக்கி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தமை போன்ற தோற்றம் காணப்பட்டதாகவும் சுன்னாகம் பொலிஸாருக்கு வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தையில் இருந்த கண்காணிப்பு கமரா பதிவுகளை சோதனையிட்டு துப்பாக்கியுடன் வருகை தந்த நபர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட நபரை அடையாளம் கண்ட பொலிஸார் அவரை கைது செய்து செய்துள்ளதுடன், அவர் சந்தைக்கு கொண்டு சென்ற துப்பாக்கியையும் மீட்டுள்ளனர்.
அதன் போது சந்தைக்கு கொண்டு சென்றது போலி துப்பாக்கி எனவும், அவர் தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

