Friday, January 30, 2026 12:54 pm
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இலச்சினையை அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதி பெறாமல் இலச்சினையைப் பயன்படுத்தும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதிவாளர் வி. காண்டீபன் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19, 20, 21, 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இதன் போது பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் பல்கலைக்கழக இலச்சினை பொறிக்கப்பட்ட கழுத்துமாலை, பட்டச் சான்றிதழ் சுருள் மற்றும் பல்கலைக்கழகப் இலச்சினை பொறிக்கப்பட்ட பரிசுப் பொருட்கள் என்பன தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களினால் விற்பனை செய்யப்படுவதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் அறிகிறது. இது சட்டப்படி குற்றச்செயலொன்றாகும்.
பல்கலைக்கழக மூதவை மற்றும் பேரவையின் அனுமதியுடன், நடைமுறைகளின் ஊடாக பல்கலைக்கழக இலச்சினையைப் பயன்படுவதற்குப் பதிவாளரிடமிருந்து உரிய ஒப்புதல்கள் பெறப்பட வேண்டும்.
அவ்வாறில்லாமல் எவரேனும் தனிநபரோ அல்லது நிறுவனங்களோ இலச்சினையை பயன்படுத்தினால் அவர்களுக்கெதிராக உரிய சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனை அறியத்தருகின்றேன் என அந்த செய்திக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

