Monday, December 29, 2025 10:15 am
திருகோணமலை, சம்பூர் – மலைமுந்தல் கடற்பரப்பில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் (ISRO) விண்ணிற்கு ஏவப்பட்ட ரொக்கட்டின் ஒரு பகுதி கரையொதுங்கியுள்ளது.

கடந்த சில தினங்களாக திருகோணமலை ஆழ்கடல் பகுதியில் மிதந்து வந்ததாகக் கூறப்படும் இந்த உலோகப் பாகம் நீரோட்டத்தின் காரணமாக நேற்று மாலை சம்பூர் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது. இதனை அவதானித்த மீனவர்களால் உடனடியாகப் பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
சம்பூர் பொலிஸ் பிரிவின் அறிவுறுத்தலின் பேரில் கரை ஒதுங்கியுள்ள பாகத்தினை கடற்படை வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர். இது குறித்த ஆய்வுகள் நிறைவடையும் வரை பொதுமக்கள் அருகில் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரொக்கட்டுகள் விண்ணை நோக்கிப் பாயும்போது புவி ஈர்ப்பு விசையைத் தாண்டிச் செல்வதற்காகப் பல்வேறு நிலைகளில் அதன் பாகங்கள் கழன்று விழும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
அவ்வாறு இந்தியாவிலிருந்து ஏவப்பட்ட ரொக்கட்டின் ‘ஹீட் ஷீல்ட்’ (Heat Shield) அல்லது எரிபொருள் கலனின் ஒரு பகுதியே இவ்வாறு மிதந்து வந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

