Saturday, December 20, 2025 3:05 pm
யாழ். தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரையில் புதிய புத்தர் சிலையை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இந் நிலையில் குறித்த செயற்பாட்டிற்கு பாதுகாப்பு அனுமதி கோரி பாதுகாப்பு தரப்பினருக்கு மகா சங்கத்தினரால் எழுத்து மூலம் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2026 தை மாதம் மூன்றாம் திகதி அன்று காலை 10.00 மணியளவில் கன்யாசந்துவ தும்ரி ஸ்தாச சி தி ராஜ விஹாரையில் இருந்து கொண்டு வரப்படும் புத்தர் சிலை திஸ்ஸ ராஜ விகாரையில் நிறுவப்படவுள்ளது. இதன்போது பக்தர்களின் பங்கேற்புடன் ஊர்வலமும் நடத்தப்படவுள்ளது.
ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் எந்த பயமோ சந்தேகமோ இல்லாமல் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கை குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி போயா தினத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறித்த விகாரை தனியாருக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதனை அகற்ற வேண்டும் என வலிவடக்கு பிரதேச சபைகள் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் எந்த ஒரு கட்டுமானங்களும் அங்கு இடம் பெறக் கூடாது என சபையால் விகாராதிபதிக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் புதிய புத்தர் சிலையை வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவது மதரீதியான கலவரத்தை தூண்டுவதாக பலரும் விமர்சனம் எழுப்பியுள்ளனர்.

