Tuesday, December 16, 2025 9:54 am
அனர்த்தம் காரணமாக வீட்டில் சிக்கியிருந்த குழந்தை ஒன்று சிறப்பு படையினரால் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் 2வது கமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த 8 பேர் கொண்ட குழு, கண்டியில் மீமுர பகுதியில் வீட்டில் சிக்கியிருந்த மூன்று மாதக் குழந்தை மற்றும் அவரது பாட்டியை கடந்த 3 ஆம் திகதி மீட்டனர். குழந்தையின் தாயார் வேலைக்குச் சென்றிருந்த நிலையில் அனர்த்தம் காரணமாக வேறு பகுதியில் சிக்கியிருந்தார்.
மீட்கப்பட்ட குழந்தை மற்றும் பாட்டி ஆகிய இருவரும் விமானம் மூலம் இராணுவ முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
தாய் வேறொரு இடத்தில் சிக்கியிருந்த நிலையில் அவரை கண்டுபிடிக்கும் வரையில் குழந்தை இராணுவ முகாமில் பாதுகாப்பாக பாட்டியுடன் தங்க வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் தாய் கண்டுபிடிக்கப்பட்டு நேற்று குழந்தை அவரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


