Thursday, May 21, 2026 10:12 am
இலங்கையில் சைபர் குற்றங்களை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்படலாம் என சந்தேகிக்கப்படும், சுமார் 51 லட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அவற்றிற்கான மின்கலங்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்த முயன்ற மூன்று சீன நாட்டவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
(19) செவ்வாய்க்கிழமைஅன்று விமான நிலைய சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 34 வயதுடைய சீனப் பெண் ஒருவரும், 35 வயது மதிக்கத்தக்க இரண்டு சீன ஆண்களும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் நேற்று இரவு 06.43 மணியளவில் சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து ‘சைனா ஈஸ்டர்ன்’ விமான சேவைக்கு சொந்தமான MU-6017 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். விமான நிலையத்தின் தீர்வையற்ற வர்த்தக வளாகத்தில் வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு மத்தியில், கறுப்பு நிற “டியூலிப்” ரக பொலித்தீன் பையொன்றை எடுத்துக்கொண்டு, “பச்சை வழி” (Green Channel) ஊடாக சந்தேகத்திற்குரிய முறையில் வெளியேற முயன்ற முதலாவது சீன நபரை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். இதன்போது, குறித்த பையிலிருந்த டொபி மற்றும் சொக்லேட்டுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசிகளின் ஒரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட தீவிர உடற் பரிசோதனையின் போது, அவர் அணிந்திருந்த ஆடைக்கு அடியில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ஜாக்கெட் ஒன்றிற்குள் மேலும் பல தொலைபேசிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
அத்துடன், அவருக்குப் பின்னால் வந்த சீனப் பெண்ணின் காலுறைகளுக்குள்ளும், மற்றைய சீன நபரின் பயணப் பையினுள்ளும் மிக நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒட்டுமொத்தமாக 87 கையடக்கத் தொலைபேசிகளும், அவற்றுக்கான 140 மின்கலங்களும் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மூன்று சீன தேசியவாதிகளையும் தமது காவலில் வைத்துள்ள கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள், இந்த கடத்தலின் பின்னணியில் உள்ள ஏனைய நபர்கள் மற்றும் சைபர் குற்றச் செயல்களுக்கான திட்டங்கள் குறித்து மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

