Wednesday, June 10, 2026 4:10 pm
தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று மதியம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கடந்த 2019ஆம் ஆண்டு 16.5 மில்லியன் ரூபா தென் மாகாண சபை உறுப்பினர் நிதியின் கீழ் தென் மாகாணத்திலுள்ள பொதுத் தன்னார்வ சங்கங்களுக்கு நாற்காலிகளை வழங்கியமை தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உரிய கொள்முதல் நடைமுறைகளை மீறி உற்பத்தி நிறுவனம் ஒன்றைத் தெரிவு செய்து அந்த நிறுவனத்திற்கு சாதகமாகச் செயற்பட்டமை மற்றும் தென் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த 54 மாகாண சபை உறுப்பினர்களின் இல்ல அலுவலகங்களுக்கு கொள்வனவு செய்யப்பட்ட 16,361 நாற்காலிகளைப் போக்குவரத்துச் செய்து ஒப்படைக்கச் செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

