Saturday, August 22, 2026 8:30 pm
முன்னாள் ஜப்பான் சர்வதேச வீரரான கசுயோஷி மியூரா, 59 வயது, ஐந்து மாதம் ,24 நாட்களில் பேரரசர் கோப்பைத் தொடரின் மிக வயதான கோல் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்ற பிறகு, அதன் அடுத்த சுற்றில் விளையாட தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
“கிங் கசு” என்று செல்லப்பெயர் பெற்ற மியூரா, புதன்கிழமை அன்று தொழில்முறை அல்லாத அணியான ஒயாமா சாக்கர் கிளப்பை, ஜே.லீக் மூன்றாம் பிரிவு கிளப்பான ஃபுகுஷிமா யுனைடெட் 7-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய போட்டியில் இரண்டு பெனால்டி கோல்களை அடித்தார்
“நான் போட்டிகளில் விளையாடவில்லை என்றால், என்னால் கோல் அடிக்க முடியாது. நான் களத்தில் இறங்குவதற்காக ஒவ்வொரு நாளும் கடினமாக உழைத்துக்கொண்டே இருப்பேன்,” என்று வடகிழக்கு ஜப்பானின் ஃபுகுஷிமாவில் நடைபெற்ற தேசியத் தொடரின் முதல் சுற்றுப் போட்டிக்குப் பிறகு மியூரா கூறினார்.
மியூரா 12-வது நிமிடத்தில் தனது சாதனை கோலை அடித்தார். இதன் மூலம், 2021ஆம் ஆண்டு 41 வயதில் இந்தப் போட்டியில் கோல் அடித்து சாதனை படைத்திருந்த முன்னாள் ஜப்பான் நடுக்கள வீரர் ஷின்ஜி ஓனோவின் முந்தைய சாதனையை அவர் முறியடித்தார்.
மியூரா 55-வது நிமிடத்தில் தனது இரண்டாவது பெனால்டியை கோலாக மாற்றினார், மேலும் மூன்று நிமிடங்கள் கழித்து அவர் மாற்று வீரராக வெளியேற்றப்பட்டார். “நான் எப்போதும் பெனால்டிகளைப் பயிற்சி செய்திருக்கிறேன், அதனால் அது பலனளித்ததில் எனக்கு மகிழ்ச்சி,” என்று அவர் கூறினார்.
ஷிஜுவோகா மாகாணத்தைச் சேர்ந்தவரான மியூரா, 1990-களின் முற்பகுதியில் ஜே.லீக் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானியஉதைபந்தாட்டப் புகழ் உயர்வதில் ஒரு முக்கிய நபராகத் திகழ்ந்தார்.
1994-95 சீசனில் ஜெனோவா அணிக்காக இத்தாலியின் சீரி ஏ-வில் விளையாடிய முதல் ஜப்பானிய வீரர் ஆனார். பின்னர் ஜப்பான் உட்பட பல நாடுகளில் உள்ள கிளப்புகளுக்காக விளையாடினார்.

