Tuesday, May 5, 2026 4:37 pm
நடந்துமுடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாய அமைப்பின் தலைவர் தம்பிராசா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
விஜயின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி குறித்து யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து அவர் மேலும் கூறுகையில் ,
தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள விஜய், ஈழத் தமிழர்களின் நீண்டகாலப் போராட்டங்கள், அவர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் சார்ந்த விவகாரங்களிலும் கூடுதல் அக்கறையுடனும், கரிசனத்துடனும் செயல்பட வேண்டும்.
அத்துடன் தமிழகத்திற்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உணர்வுபூர்வமான உறவை மதித்து, அவர்களுக்கான நீதியைப் பெற்றுத் தர விஜய் குரல் கொடுக்க வேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கையாக இருக்கின்றது.
அந்தவகையில் – தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று வெற்றிப் பயணம் மேற்கொண்டுள்ள தம்பி விஜய், தனது இந்த புதிய அரசியல் பயணம் தமிழக மக்களுக்கு மட்டுமல்லாது ஈழதேச மக்களுக்கும் குறிப்பாக காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், சட்டவிரோத நில அபகரிப்பு, இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை உள்ளிட்ட விடையங்களில் தலையீடு செய்து அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுத்தர முயற்சிக வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

