Wednesday, February 25, 2026 2:39 pm
அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக பனிப்புயல் வீசி வரும் நிலையில் 153 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக “தி பாஸ்டன் குளோப் பத்திரிகை” தனது தினசரி செய்தித்தாளை அச்சிடுவதை நிறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் பனிப்புயல் தாக்கத்தால் பட இடங்களில் பனி 3 அடி உயரம் வரை குவிந்துள்ளது. நியூஜெர்சி மாகாணத்தில் அவசரநிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவால் அவசர போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மரங்கள் விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் வடகிழக்கு அமெரிக்காவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
பாஸ்டன், கனெக்டிகட், மேரிலேண்ட், விர்ஜினியா உள்ளிட்ட மாகாணங்களிலும் பனிப்புயல் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கடுமையான பனிப்புயலால் 153 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக தி பாஸ்டன் குளோப் பத்திரிகை தனது தினசரி செய்தித்தாளை அச்சிடுவதை நிறுத்தியுள்ளது.
பாஸ்டன் குளோப் அச்சகம் அமைந்துள்ள மசாசூசெட்ஸ் மாகாணத்தின் பிரிஸ்டாலில் 2 அடி உயரத்துக்கு பனி குவிந்துள்ளமையினால் ஊழியர்கள் பணிக்கு வருவதில் சிரமம் ஏற்பட்டது என்பதாலேயே நாளிதழ் வெளியாவது நிறுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரபல நாளிதழான தி பாஸ்டன் குளோப் 1872-ம் ஆண்டு நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பாஸ்டன் குளோப் நாளிதழின் 153 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக நாளிதழ் வெளியீடு நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

