Tuesday, February 10, 2026 11:01 am
கோரிக்கைகளை நிறைவேற்றாது இலங்கை மின்சார சபையைக் கலைப்பதற்கான திகதியை வர்த்தமானி மூலம் அறிவித்தால், எவ்வித முன்னறிவிப்புமின்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மின்சார சபையின் 24 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளின் கையொப்பத்துடன் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக 8 கோரிக்கைகளை உள்ளடக்கிய கடிதம் கடந்த ஜனவரி 12ஆம் திகதி சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களினால் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கோரிக்கைகள் தொடர்பில் இதுவரை எந்தவித சாதகமான பதிலும் கிடைக்கப்பெறாத நிலையில் மீண்டும் அக்கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு நேற்று அமைச்சருக்கு மற்றுமொரு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.
தமது கோரிக்கைகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதால், அவற்றை வென்றெடுப்பதற்காக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர ஊழியர்களுக்கு வேறு வழியில்லை என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

