Monday, December 8, 2025 3:19 pm
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதால் யாழ்.மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் இழக்கப்பட்டுள்ளது என தெரிவித்து எதிர்வரும் 12ஆம் திகதி எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் நாகபட்டினம் – காரைக்கால் மீனவர்களின் இழுவைப்படகுகள் கரையை அண்மித்து மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு தொடக்கம் நெடுந்தீவு வரையான மீனவ சங்க பிரதிநிதிகள் யாழ். மாவட்ட நீரியல்வளத் திணைக்கள பிரதிப் பணிப்பாளரை இன்று காலை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடினர்.
கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. அரசாங்கம் இதனை கட்டுப்படுத்த வேண்டும் . இந்தப்பிரச்சினையை கட்டுப்படுத்த தவறும் பட்சத்தில் மீனவர்கள் கடலில் இறங்கிப் போராட வேண்டிய நிலை ஏற்படும் என இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் மீனவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட மீனவர்கள் ஒன்றினைந்து நீரியல்வளத் திணைக்களத்தின் முன்னிருந்து போராட்டம் ஒன்றை ஆரம்பித்து மாவட்டச் செயலகம் வரை செல்லவுள்ளதாகவும் மாவட்டச் செயலகத்தை முடக்கி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

