Saturday, December 6, 2025 10:20 am
வடகீழ் பருவப் பெயர்ச்சிக்கான காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு , கிழக்கு , வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும், திருகோணமலை தொடக்கம் முல்லைத்தீவு, காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.
புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30Km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசக் கூடும்.
புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான அத்துடன் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45Km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

