Saturday, November 15, 2025 10:01 am
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் அடுத்தவாரம் ஜனாதிபதி செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரியவருகிறது.
இனப்பிரச்சனைக்கான தீர்வு குறித்து பேச்சுவார்த்தையில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த விடயம் குறித்து பேசுவதற்காக தமிழரசுக் கட்சி அனுப்பி வைத்த கோரிக்கை கடிதத்தின் அடிப்படையில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஏற்கனவே இன்னொரு முக்கிய விடயத்திற்கான சந்திப்புக்காக புதன் அல்லது வியாழக்கிழமை நண்பகல் நேரத்தை வழங்கி இருக்கின்றார்.
அந்தச் சந்திப்பு நடக்கும் நாளுக்கு மற்றைய தினத்தில் இந்தச் சந்திப்பு நடக்கும் என்று ஜனாதிபதியின் செயலக அதிகாரிகள் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரோடு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்திருக்கின்றார்கள் என அறியவருகின்றது.
புதன்கிழமையா, வியாழக்கிழமையா சந்திப்பது என்பதை இன்று அல்லது நாளை ஜனாதிபதி செயலகம் தமிழரசுக் கட்சியின் நிர்வாகிகளுக்கு உறுதிப்படுத்தும் எனத் தெரிகின்றது.
மாகாண சபைத் தேர்தலை நடத்துதல், 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல் ஆகியவை குறித்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

