Wednesday, November 12, 2025 11:45 am
கடந்த 10ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற தலாவ பஸ் விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பஸ்ஸின் சாரதியை எதிர்வரும் நவம்பர் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புத்தேகம நீதவான் கயாத்திரி ஹெட்டியாரச்சி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அது தொடர்பிலான முன்னேற்றம் குறித்த அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு தம்புத்தேகம பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
விபத்துச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பஸ்ஸின் நடத்துனரை, தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்திய தம்புத்தேகம பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர், ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது பஸ் சாரதியின் அஜாக்கிரதை மற்றும் கவனக்குறைவு காரணமாகவே விபத்து இடம்பெற்றது எனத் தெரியவந்துள்ளதாகக் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்ததுடன், சுமார் 40 இற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்திருந்தனர்.

