Tuesday, October 28, 2025 1:21 pm
இலங்கையில் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்க கல்வி அமைச்சு திட்டவட்டமாகத் தீர்மானித்துள்ளது. இந்த முடிவுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இதில் எந்தவித மாற்றங்களும் ஏற்படுத்தப்படாது என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தக் கல்விச் சீர்திருத்தங்களை தேசிய கல்வி நிறுவகம் மட்டுமே வடிவமைப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவேவ ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வி நிறுவகம் முதலில் ஒரு பாட நேரத்தை ஒரு மணிநேரமாக நீட்டிக்க முன்மொழிந்தது. ஆனால், நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, ஒரு பாட நேரம் 50 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டது. இதன் காரணமாகவே பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்களுக்குத் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த உரிமை உண்டு, ஆனால் திட்டமிடப்பட்டதை நம்மால் மாற்ற முடியாததோடு , இந்த நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட செலவு ஏற்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியிருக்கின்றார். எனவே பாடசாலை நேரத்தை 2 மணி வரை நீடிப்பதில் மாற்றம் இல்லை என்றும் அவர் உறுதியளித்தார்.
தற்போது பிற்பகல் 1.30 மணி வரை இருக்கும் பாடசாலை நேரம், இந்தச் சீர்திருத்தத்தின் கீழ் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை (30 நிமிடங்கள் ) நீட்டிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்குள் அரசாங்கம் முன்மொழியப்பட்ட கால அட்டவணையைத் திருத்தாவிட்டால், புதிய பாடசாலைப் பருவம் தொடங்கும் போது ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.
2026 இல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த சீர்திருத்தங்கள், 50 நிமிட நீண்ட பாட நேரங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் கற்றல் சூழலை மேம்படுத்துவதையும், கொவிட்-19 தொற்றுநோய் போன்ற முந்தைய இடையூறுகளால் இழந்த கல்வியாண்டு நேரத்தை ஈடுசெய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

