Tuesday, October 28, 2025 10:31 am
தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், “ஒரு வாக்கின் சக்தியின் கதைகள்” குறும்படப் போட்டி -2025 தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு, யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளர் இ.சசீலன் தலைமையில், யாழ்ப்பாண மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு நேற்று இடம்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையினர் பங்கேற்றிருந்தனர்.
தயாரிக்கவுள்ள குறும்படத்திற்கு கதை எவ்வாறு எழுதுவது, புகைப்படங்களை கையாளும் நுட்பங்கள், காணொளி செம்மையாக்கம், கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி எவ்வாறு குறும்படத்தை உருவாக்குவது மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி குறும்படங்களை எவ்வாறு தயாரிப்பது உள்ளிட்ட பல விடயங்கள் இந்த நிகழ்ச்சியின் போது மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

குறித்த விழிப்புணர்வு நிகழ்வின் போது யாழ் மாவட்ட பாடசாலைகளில் ஊடக கற்கைகள், நாடகம் அரங்கியல் கற்கை மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
ஜனநாயக விழுமியங்களை மேம்படுத்துதல், ஆக்கப்பூர்வமான வெளிப்பாடு மூலம் தேர்தல் செயல்பாட்டில் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவித்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு, இலங்கைத் தேர்தல் ஆணையம் “ஒரு வாக்கின் சக்தியின் கதைகள்” எனும் குறும்படப் போட்டியை இந்த ஆண்டு ஏற்பாடு செய்துள்ளது.
திறந்த பிரிவு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான பிரிவு என, இரண்டு பிரிவுகளாக நடைபெற உள்ள இக்குறும்பட போட்டி சமர்ப்பிக்க வேண்டிய இறுதி திகதி நவம்பர் 14 என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளம் ஊடாக மேலதிக விபரங்களை அறிய முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


