Friday, October 24, 2025 2:31 pm
ஐஸ்லாந்து நுளம்புகள் இல்லாத நாடு என்ற பெருமையை இழந்துள்ளது.
ஐஸ்லாந்தின் இயற்கை அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த பூச்சியியல் நிபுணர் மத்தியாஸ் ஆல்ப்ரெட்ஸன் (Matthias Alfredsson) தலைநகர் ரேக்ஜாவிக்கில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் (20 மைல்) வடக்கே மூன்று நுளம்புகள் கண்டறியப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
‘குலிசெட்டா அன்யூலேட்டா’ (Culiseta annulata) வகையைச் சேர்ந்த இந்தக் நுளம்புகளில் இரண்டு பெண் நுளம்புகள் என்றும் மற்றொன்று ஆண் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தாட்டிக்காவுடன் சேர்த்து ஐஸ்லாந்து நீண்ட காலமாக நுளம்புகள் இல்லாத சில நாடுகளில் ஒன்றாக இருந்து வந்தது.
இந்நிலையில் அங்கு நுளம்புகள் உருவாகியிருப்பதை மத்தியாஸ் ஆல்ப்ரெட்ஸன் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் வந்த கப்பல்கள் அல்லது சரக்குப் பெட்டகங்கள் வழியாக ஐஸ்லாந்திற்குள் இந்தக் நுளம்புகள் நுழைந்திருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.
இந்த இனம் பல இடங்களில் பரவியுள்ளதா என்பதை கண்டறிய வசந்த காலத்தில் (Spring) கண்காணிப்பைத் தொடர வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

