விலையுயர்ந்த கைத்தொலைபேசி விசேட விலைக்கழிவில் விற்பனை என்ற போலியான விளம்பரத்தைப் பார்த்து பலர் பல இலட்சம் ரூபா பணத்தினை இழந்துள்ளனர்.
29ஆம் குடியேற்றத்திட்டம், பாண்டிருப்பு – 02, கல்முனை என்ற முகவரியைச் சேர்ந்த நபர் ஒருவர் விலையுயர்ந்த கைத்தொலைபேசிகள் இருப்பு இருப்பதாகவும், விசேட விலைக்கழிவில் 334,000 ரூபாவுக்கு அதனை வழங்குவதாகவும் கூறி சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்துள்ளார்.
இந்த விளம்பரத்தை நம்பி பலர் அவரை தொடர்புகொண்ட வேளை கைத்தொலைபேசியை வீட்டுக்குக் கொண்டு சென்றே வழங்குவதாகக் கூறி முற்பணம் கேட்டுள்ளார்.
இந்நிலையில், பலர் அவரது கணக்கு இலக்கத்துக்குப் பணத்தை வைப்பு செய்ததன் பின்னரே, தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.
குறித்த மோசடியால், யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் 171,000 ரூபாவை இழந்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று (06) வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவைப் பெற்று கல்முனை பொலிஸார் ஊடாக குறித்த சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.