முல்லைத்தீவு மாவட்டத்தினை உள்ளடக்கி வடக்கு தெங்கு முக்கோண வலயத்தினை உருவாக்கும் “நாடே சுபீட்சமாக்கும் விருட்சம் கற்பகத்தரு வளம் உலக தெங்கு தின கொண்டாட்டம் 2025” அங்குரார்ப்பண நிகழ்வானது இன்று (02) முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கந்தசுவாமி ஆலய வளாகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
சமய சம்பிரதாயங்களின் அடிப்படையில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் பொன்னாடை போர்த்தி ஜனாதிபதியை வரவேற்றதோடு நிகழ்வுகள் மிகச் சிறப்பான முறையில் ஆரம்பமாகி நடைபெற்றது.
இந்த தெங்கு முக்கோண வலையங்களுள் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய், மன்னார் மாவட்டத்தில் சிலாவத்துறை, யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை முதலான இடங்கள் தெங்கு முக்கோண வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தென்னைப்பயிர்ச் செய்கையினை ஊக்குவிப்பதற்காகவும் பொருளாதாரத்தினை மேம்பாடடையச் செய்யும் நோக்கிலும் இந்த செயற்றிட்டம் வடமாகாணத்தில் 16,000 ஏக்கரில் செயற்படுத்தப்படவுள்ளது. இதற்கான தென்னம்பிள்ளைகள் மிகக் குறைந்த விலையில் மானிய அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பெருந்தோட்ட உட்கட்டமைப்புகள் அமைச்சர் சமந்த வித்தியாரட்ண, பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான திலகநாதன், ஜெகதீஸ்வரன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராசா, யாழ்ப்பாண இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி, மதகுருமார்கள், திணைக்களங்களின் அதிகாரிகள், தவிசாளர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.