இந்தியாவின் கர்நாடகா – கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது நிரம்பிய பெண் இதய அறுவை சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ துறையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, அவருக்கு அங்கு இரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரது இரத்தம் “ஓஆர்.எச்.பொசிட்டிவ்” (ORH positive blood type) வகையைச் சேர்ந்தது என கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால், வழக்கத்திற்கு மாறாக அவரது இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களும் வினைபுரியும் நிலையில் இருந்தது. பொதுவாக சிவப்பு அணுக்கள் வினைபுரியும் நிலையில் இருக்காது என கூறப்படுகிறது.
வைத்தியர்கள் அந்த பெண்ணின் இரத்த மாதிரியை பெங்களூர் டி.டி.கே. இரத்த மையத்தில் அமைந்திருக்கும் அதிநவீன இரத்த பரிசோதனை மையத்துக்கு அனுப்பினர்.
அங்கு அந்த பெண்ணின் இரத்தத்தை பரிசோதனை செய்ததில் இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களும் வினைபுரியும் நிலையில் இருந்ததை இரத்த பரிசோதனை மையத்தில் வைத்தியர் அங்கித் மாதுர் உறுதிப்படுத்தினார். பின்னர் அவர் அந்த பெண்ணின் இரத்த மாதிரியை இங்கிலாந்தில் உள்ள சர்வதேச இரத்தவகை கண்டறியும் மையத்துக்கு அனுப்பினார்.
அங்கு 10 மாதங்களாக நடந்த சோதனையில் அந்த பெண்ணுக்கு இருப்பது உலகிலேயே யாருக்கும் இல்லாத புதிய வகை இரத்தம் என கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இரத்த வகைக்கு சி.ஆர்.ஐ.பி.(கோமர் இந்தியா பெங்களூர்) என பெயரிடப்பட்டுள்ளது.
உலகிலேயே இந்த வகை இரத்தம் உள்ள முதல் நபர் கோலார் பெண் தான் என அவர்களும் அறிவித்தனர். இது மருத்துவத்துறையில் அதிசயமாக பார்க்கப்படுகிறது.