யாழ் – கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணிப்பகுதியில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தி கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 1.00 மணியளவில் வரணி மந்துவில் வீதியில் இயற்றாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது…
பளை பகுதியிலிருந்து சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் வாகனத்தை எழுதுமட்டுவாள் பகுதியில் கடமையிலிருந்த கொடிகாமம் பொலிஸார் நிறுத்த முயற்சித்த போது குறித்த டிப்பர் வாகனம் நிறுத்தாது கொடிகாமம் பகுதியை நோக்கி தப்பியோடியது.
இதையடுத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் கொடிகாமம் பகுதியிலும் பொலிஸார் நிறுத்த முயற்சித்தனர்.
எனினும் டிப்பர் வாகனம் நிறுத்தாது வரணியை நோக்கி தப்பியோடியது.
இதையடுத்து பொலிஸார் குறித்த டிப்பர் வாகனத்தை தமது வாகனத்தில் துரத்திச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் டிப்பர் வாகனம் வரணி மந்துவில் வீதியால் திரும்பிச் சென்று வேம்பிராய் நோக்கி மிக வேகமாகத் தப்பியோடியது.
இதன் போது டிப்பரில் இருந்தவர்கள் பொலிஸாரின் வாகனத்தை நோக்கி டார்ச் லைற் மூலம் பிரகாசமான ஒளியை பாய்ச்சியிருந்தனர்
இதனால் தமது வாகனத்தை செலுத்த முடியாத நிலையில் பொலிஸார் டிப்பர் வாகனத்தின் ரயர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தனர்
இந்த நிலையில் துப்பாக்கி வேட்டுக்கள் டிப்பர் வாகனத்தின் ரயரை வெடிக்கச் செய்ததுடன் எரிபொருள் தாங்கி மீதும் துளையிட்டது.
இதையடுத்து குறித்த டிப்பர் வாகனத்தை நிறுத்திவிட்டு சாரதி உட்பட இரண்டு சந்தேக நபர்கள் தப்பித்துள்ளதாக கொடிகாமம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் வாகனத்தை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் தப்பியோடிய சந்தேநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.