கடந்த மார்ச் மாதம் எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் கடந்த மார்ச் 17ஆம் திகதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மூன்று மீனவர்களையும் கைது செய்து இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 11 மீனவர்கள் கடந்த மார்ச் 26 ஆம் திகதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் 11 மீனவர்களையும் கைது செய்து இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு 14 பேரையும், சிறையிலிருந்து விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர் அவர்கள் அனைவரும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்திய தூதரக அதிகாரிகள் 14 பேரையும் தங்களுடைய பராமரிப்பில் வைத்துக்கொண்டு, அவர்களை விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விமானம் மூலம் நேற்று சென்னை வந்த மீனவர்கள், தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம் சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.