ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கை வந்த இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி நேற்று அநுராதபுரம் பயணம் மேற்கொண்டு மஹவ – ஓமந்தை ரயில் வீதி மற்றும் மஹவ – அநுராதபுரம் ரயில் வீதி சமிக்ஞை கட்டமைப்பு என்பவற்றை திறந்து வைத்தனர்.
வெளிவிவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், வர்த்தக,வாணிப,உணவு, பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வட மத்திய மாகாகண ஆளுநர் வசந்த ஜினதாச ஆகியோரும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்டவர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமரால் பெயர் பலகையை திறைநீக்கம் செய்யப்பட்டு ரயில் வீதி மற்றும் சமிக்ஞை கட்டமைப்பு திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் ரயில் புறப்பட்டுச் செல்வதற்கான முதலாவது சமிக்ஞை காண்பிக்கப்பட்டது.
14.89 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஸ்தாபிக்கப்பட்ட மஹவ – அநுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அண்மைய இந்திய விஜயத்தின் பின்னர் இலங்கைக்கு அன்பளிப்பாக கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.