அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்நாகாடு சாவாறு பகுதியில் நேற்றைய தினம் நண்பருடன் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை (31) மாலை நண்பருடன் மீன் பிடிக்கச் சென்ற குறித்த நபர் காணாமல் போயுள்ளார்.
இந்நிலையில் அவரது மனைவி தனது கணவரைக் காணவில்லை என கடந்த செவ்வாய்க்கிழமை இறக்காமம் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து, காணாமல் போன மீனவரின் நண்பரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, நேற்று (01) பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது, காணாமல் போன மீனவரின் சடலம் நண்பகல் நேரத்தில் மீட்கப்பட்டது.
சடலமாக மீட்கப்பட்டவர் கல்முனை – பாண்டிருப்பு பகுதியைச்சேர்ந்த 48 வயதுடைய செல்வராசா வெற்றி வேல் என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
மீட்கப்பட்ட மீனவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.