Saturday, May 23, 2026 4:06 pm
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜாவுக்கு அணியில் இடம் கிடைக்காதது அவர் அணியில் இருந்து ஓரங்கட்டப்படுகிறாரா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. r
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தற்போது ஐபிஎல் தொடரில் ஆடி வருகின்றனர். ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் மோத உள்ளது.
இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் டெஸ்ட், ஒருநாள் தொடர் ஆகியவற்றில் விளையாட உள்ளது. டெஸ்ட் ,ஒருநாள் அணிக்கு சுப்மன்கில் கப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் தொடரில் ஓய்வு பெற்றுள்ள ரோகித் சர்மா விராட் கோலி ஆகிய இருவரும் ஒருநாள் தொடரில் இடம்பெற்றுள்ளனர். ரி20 தொடரில் மட்டும் ஓய்வு பெற்றுள்ள ஜடேஜா, டெஸ்ட் அல்லது ஒருநாள் போட்டிகளில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அணியில் இடம்பெறவில்லை.
தலைசிறந்த ஆல்ரவுண்டரான ஜடேஜா டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடிக்காமல் போனது அனைவருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதன் மூலமாக ரவீந்திர ஜடேஜா ஓரங்கட்டப்படுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
37 வயதான ஜடேஜா இதுவரை 89 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 133 இன்னிங்ஸ்களில் விளையாடி 4 ஆயிரத்து 95 ஓட்டன்ர்களை எடுத்துள்ளார். அதில் 6 சதங்கள், 28 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 175 ஓட்டங்களை விளாசியுள்ளார். 210 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 905 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக 87 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 13 அரைசதங்கள் விளாசியுள்ளார்.
இந்திய சுழற்பந்துவீச்சின் முக்கிய தூணாக திகழும் ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் 348 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 232 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். ரோகித் சர்மா, விராட் கோலி போல ஜடேஜாவும் அடுத்தாண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பையில் விளையாட ஆர்வத்துடன் உள்ளார்.
ஆனால், அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் , அணித்தேர்வுக்குழு தலைவரான அஜித் அகர்கர் ஆகிய இருவரும் ரோகித் சர்மா, விராட் கோலி , ஜடேஜா ஆகிய மூவரும் அணியில் இடம்பிடிப்பதை விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. இவர்களின் அழுத்தம் காரணமாகவே விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெற்றதாகவும் கூறப்படுகிறது.
பும்ரா , ஜடேஜா இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானாலும் பும்ரா மீண்டும் அணியில் இடம்பிடிப்பது உறுதியாகும். ஆனால், அடுத்தடுத்த தொடர்களில் ஜடேஜா இடம்பிடிப்பாரா? என்பது கேள்விக்குறியாகும்.

