Monday, May 25, 2026 2:12 pm
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டிற்கு எந்தவித உரிமையும் இல்லை என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இச்சூழ்நிலை தமிழக விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் , கர்நாடகாவின் தன்னிச்சையான அறிவிப்புகள் குறித்து தமிழக முதலமைச்சர் விஜய் தலைமை செயலகத்தில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த முக்கிய ஆலோசனையில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சினையான காவிரி நீர் உரிமையை பாதுகாப்பது குறித்தும், கர்நாடக அரசின் மேகதாது அணை முயற்சிக்கு சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எவ்வாறு முட்டுக்கட்டை போடுவது என்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமலும், உச்ச நீதிமன்த் தீர்ப்புக்கு எதிராகவும் கர்நாடகா அணை கட்டுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என்பதில் புதிய அரசு உறுதியாக இருப்பதாக கூட்டத்திற்குப் பின் தகவல்கள் வெளியாகியுள்ளன.

